Pages

Thursday, August 30, 2012

பதுங்கல் பாய்ச்சலாய் உருக் கொள்ளும்


அவர்களின் வாழ்க்கை விசித்திரமானது
கடந்த காலங்களைப் போல்
போர் மட்டுமே இல்லையே தவிர
மரணங்கள் பிறந்தபடிதானுள்ளது. . . .!

புவியில் ஒரு புது கொலைநுட்பம்
போரின்றி ஓரினம்,
அவர்க்கு தெரியாமலே அழிக்கப்படுவது
இதுவே முதல்முறை !

அவர்களுடைய வாழ்வு
பதுங்ககழிக்குள்
நாட்காட்டி கிழித்தது பலகாலம்,

இப்போது ஒரு மாறுதல்!

துயிலுரிந்து பகை தின்னும்
தோழிகளின்
சிதைந்த யோனிகளின் கறைபடிந்து
கிழிகிறது . . . .

அங்கீகாரமில்லாத
ஒரு அகதி வாழ்வோடு
ஆறு தசாப்தங்கள்,
நாம் கேட்ட உரிமையை
அதோ அந்த ஆழி கவ்விக் கொண்டது !

எப்பொழுதும் தீண்டலாம் பெரும் விடம் கொண்டு
எங்கள் யோனிகளை
கயவரின் பெரும் நாக்கு,
இனவெறியின் அதியுச்சம்
பகைக்கு எழும் காமப்பசிக்காய்
இரையாகிப் போகலாம்
அம்மண்ணின் பூர்வீகப் பேத்தியினுடல். . . !

அதிகமாகும் அவலத்தின்
முகம் கண்டு
மரணமாய் உலகுணரும்
பதுங்கல்,
பாய்ச்சலாய் உருக் கொள்ளும்
பகை உயிர்க் கொல்லும்!

நெடிலேறிய மிருக நகங்களால்
கீறிக் கிழிந்தது,
அவரவர் வாழ்வும்,வயதும் !

கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும்
திட்டமிடப்பட்ட சித்ரவதைகளுடனும்
கணக்கில்லாமல்,
உயிர்களைப் பறிக்கிறது !

போதிமரமும் கொலைகளை
மௌனமாய்
சம்மதிக்கிறது!


கடற்கரையில் சுடுகாடு
இல்லையில்லை
கடலே சுடுகாடு!
மரணமே மரணித்துப் போன
மரண விழா,
மே பதினெட்டு!

விட்டுச் சென்ற வலியாகவும்
பகை மீதான வன்மத்தையும்
யாரும் எதிர்பாராத,
ஒரு தேதியில்
செய்தியாக வாசிக்க கூடும்!
ஒரு வல்லரசு
ஒன்றின் உத்தியோக பூர்வ தொலைக்காட்சி
மீண்டும்
தாகத்தின் தேடலில் தாயகத்தின் புதல்வர்களென . . .!

Monday, August 27, 2012

அத்தருணத்தில் பகைவீழ்த்தி





அட மழையில் ஒரு ராத்திரி 

நனைந்த படியும், 
வெந்து போய்க்கிடக்கிறாள் 
என் தேசத் தாய்! 


அன்றைய பகல்பொழுதில் தான் 
நான்கு நாள் 
இடைவெளிக்கு பின்னர் 
சந்திகளில் சாவுகள் ஆரம்பிக்கப்பட்டன! 


நீண்ட பெரும் பகை மூட்டத்தின் 
விலகலின் பின்பு 
கந்தகம் தின்று கொண்டிருந்தது 
அவர்களை . . . 


தேசத்தின் சொந்தக்காரர்களை 
நிர்வாணமாக்கி கொண்டிருக்கிறது காலம், 

ஆடைகளின்றி மேனி காட்டுதல் 
மட்டுமே நிர்வாணமன்று, 
சொந்தமாய் 
நாடில்லாமல் நடமாடித் திரிதலும் 
நிர்வாணமாய் உணரும் தன்மானத்தவர்கள் அவர்கள்! 

பாட்டனின் கதைகள் சொல்லி 
காற்றிலாடிய பனைகள் கழுத்தறுக்கப்பட்டும், 
வயல்களில் கந்தகம் விதைக்கப்பட்டும், 
உயிர்கள் சிதறிய வீதிகள், 
ஊனமாக்கப்பட்ட உடல்கள், 
எரிந்த வீடுகள், 
என இழப்புகள் நீண்டு போனாலும். . . 

சாம்பலாகாத உணர்வுகளுடன் 
ஆயுதப் பேய்களிடம் 
நாள் நாளாய் கரைவது உயிர் மட்டுமே ! 

எங்களுடைய வாழ்க்கை 
ஈசலுக்கு சமனானது, 
அதைவிட 
சாபமானது 
அன்றே பிறந்து அன்றேயிறக்கலாம்! 

எங்கள் வீட்டின் 
கிடுகு வேலிகளுக்கும் மின்சாரம் பாய்ச்சப்படும் 
வேறு பாய்ச்சலுக்கு பயந்து . . . ? 

வாழ்க்கையில் ஒரு அத்தியாயமும் 
வழிமுறையில் ஒரு கட்டமும் 
முடிந்திருக்கிறதே 
தவிர, 
இப்போதும் 
தீராமல் எரிந்து கொண்டுதானிருக்கிறது. . . 
எங்கள் 
வலியினதும் வேட்கையினதும் 
அகல்விளக்கு ! 

விம்மியும் வராத அழுகை 
தணிந்து போகிறது 
அழுகைக்கு பயனில்லையென தெரிந்து ? 

கடுமையான தீக்காற்று 
கானகத்தில் கருக்கொண்டிருக்கிறது 
என் தேச இடர்களை எரிக்க . . .! 

எங்கள் ஆன்மாவின் நிழலாய் 
குடியிருக்கும் தேசம் 
எமக்கென ஆவதற்காய்! 
நான் மடிந்து போகலாம் 
மன மகிழ்வோடு 
அத்தருணத்தில் பகைவீழ்த்தி . . .!

Saturday, August 25, 2012

தெய்வங்களின் இருப்பிடம் கோவில்களில் தான்\'\'





Tuesday, August 21, 2012

மீறலின் தர்மம் காதலுக்கு



Saturday, August 18, 2012

 
மதிப்புக்குரிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் நான். 

எம் உடலெரியும் தாய் நாடு



Wednesday, August 8, 2012

எங்கள் மூத்திர வாழ்வு




வலிகளை வழக்கமாய் புதைக்க தெரிந்தெமக்கு 
இலகுவாய் இருக்கிறது 
சித்ரவதைகளை எதிர்கொள்ள !

முகத்தில் சிரித்தபடி 
அகத்தில் அழுதபடி 
பிணத்தில் ஒரு நடை பிணமாய்
நடந்த படி போகிறது எம் வாழ்வு !

எந்த துயரிலும் 
கலங்காமல் 
கல்லைப் போல இருக்கிறார்கள் சிலர் !


இடப்பெயர்வு பொதிகளை இறக்கிவைத்து 
காயங்களை எமதோடு 
சேர்த்து,
முட்கம்பிக்குள் முழுமையாய் சரணாகதி அடைந்தபடி ....

எங்கள் வீட்டில் மூத்திரம் போகவே 
அடையாளப் பத்திரம் 
காட்ட வேண்டியதாய் தொடர்கிறது 
எங்கள் மூத்திர வாழ்வு !

ரணத்தின் ரணமாய், 
கணம் கணமாய்,
துடி துடித்து சாகிறது 
அவரவர் மானம் !

துப்பாக்கி கண்களால் 
குரிபார்க்கப்படுகிறது -தமிழ்த் 
தையல்களின் குறிகள் !

இதை சொல்லியழுதாலும் இயலாமையாய் 
போய்விடுமென 
மென்று 
கூட்டி விழுங்கிய படி நான் !


தாகம் தணிக்க 
காலம் பார்த்தபடி 
ஒரு கடிகார முள்ளாய்
நானும் முட்கம்பிக்குள்!


எங்கள் கனவில் 
மீண்டும் பூக்கள்,
முட்கம்பிகளுக்கு இடமில்லை!

செண்பகப் பறவை ஒன்று 
சேதி சொல்கிறது 
எனது கவிதையிலிருந்து
எழுக தோழா !
எழுக,
இல்லையேல் விழுவாய் நாயே
விழுவாய் 
எதிரி காலை நக்கி தொழுவாய்!

Sunday, August 5, 2012

அட உணர்வில்லா கல்லாய் நீ போனாய்!


















மக்களே! 
நான் அறிவேன் உங்களை 
உள் நெஞ்சின் வலிகளை, 
அன்றொரு காலத்தில் நாம் 
ஒரே தீவில் 
ஒரே கொள்கையின் காதலில் 
சுயநலமெதுவுமின்றி
நம்மை சுற்றி எழும்
ஆயுத முனைகளுக்கெதிராக
பாய்ந்து கொண்டோம் வாழ்ந்த படி...

தூக்கமில்லா இரவுகளில்
பகலிருளில்
விடியலுக்காய்
விழிப்போடு சோராமல் சேர்ந்திருந்தோம்!

தளராத நம்பிக்கையோடு
உயிர்கொடுத்து
மகிழ்வோடு
மெல்ல மெல்ல உயிர் வாழ்ந்தோம்!

கனவுப் பசியுடன்
தூரமில்லை போகும் இலக்குவென
நடந்து சென்றோம்,

போரின் காரணங்கள் பல
பொய்யாய் நீ சொல்லி
தாயவளை பிரிந்து விட்டு
பெரும்
கடலதனை கடந்து சென்று
துயரின்
முகம் பார்த்தபடி
நெஞ்சு அழுகையில் முகத்தில் சிரித்த படி
பெரும் தேசம் கடந்து சென்றாய் அன்று -தாய்
தேச உணர்வை எங்கு புதைத்தாய் இன்று ?

ஒளிரும் பனிபொழியும் நாட்டில்
உன் வாழ்க்கையை
அகதி என்னும்
அடையாள அட்டையோடு
உனது இன அடையாளம் தொலைத்து
தினம் தினம் அழிந்தபடியுள்ளாய் !

அவசிய தேசத்தை நீ மறந்து போய்
அந்நிய தேசத்தில் நீ மகிழ்ந்து போய்
என்ன இன்பம் நீ காண்பாய்
அட உணர்வில்லா கல்லாய் நீ போனாய்!

உன்னையே அறிவாயாக
உன்னையே நிறுவுவாயாக
இறுதியில்
அகதியாகவே இறந்து போவாயோ
தேசம் காக்க மறந்த ஈனப் பிறவியாய்
புழுத்துப் போவாயாக!

நீ
ஒட்டிக் கொண்ட தேசத்தில்
கொட்டுகின்ற பனிப்பொழிவில்
நீ மட்டுமல்லாது ,
உனதுணர்வும் உறைந்து போயே கிடக்கிறது !

ஆனால்
என் கவிதை ரத்தக்கறையில்
எழுதப்படுகிறது!