Pages

Monday, September 3, 2012

அடுத்த பாடத்துக்கான ஏடு தொடக்கல்








சாவுகளின் வலியோடு 
கடந்து வந்த பாதைகளை 
சொல்லி சொல்லி துயரின் மேல் சாய்ந்திருக்கிறாய். . . 

எங்கள் வீடுகளிலும் 
பள்ளிக்கூடங்களிலும் 
தேசச் சிந்தனை படிந்திருக்கும் 
பெரும் விருட்சங்களின் வேர்களைத் தாண்டி 
எப்படி 
வென்றுவிடும் 
இரண்டு இஞ்சி எழும்பி 
நிற்கும் 
பகைப் புல்லு ! 

அடுத்த 
நடத்தலுக்கான 
ஒரு இடைவெளியில் 
பெருகித் திரியும் 
துரோக நாய்களுக்கு 
விஷ ஊசி போடுவதே 
அடுத்த 
பாடத்துக்கான ஏடு தொடக்கல்! 

எங்கள் பட்டினியின் விளைவில் 
தென்படும் மகிழ்ச்சியை 
மிருகப் பசியோடு அபகரித்த 
கயவரின் கால்களை 
முறிக்க மறந்து வாழ்வு நடத்தும் 
மானமில்லாத 
வெறும் பேசும் பூதவுடல்களுக்கு 
எங்கு போய் 
பாவம் தீர்க்கும் இந்த வீர மண் . . .! 

தருவதெற்கென்று ஆக்கப்பட்ட உயிர்கள் 
தரும்போது பெரும் பசியாறுகிறது. 
மரண பயத்தில் 
வாழ்வு நடத்தும் இவ்வுலகத்தில் 
மரணத்தை மண்ணுக்காய் பரிசளிப்பதென்பது . . .! 

தேசத்தின் வடுக்களோடு 
இடப்பெயர்வை மணம் முடித்து 
தேசச் சிந்தனையில் 
எறிகணைக்கு ஒரு தாவாரம் ஒதுங்கி 
பயத்துடனே 
வாழ் நாள் முழுதும் வலியுடன் வாழும் 
இந்த மக்களை 
எப்படி பாடுவது கவிதையில் ? 

அவர்கள் உடுபுடவையிலும் 
வீடு கட்டி 
இருந்தனராம், 
கடற்கரை மரத்தோடு . . . 

தோழா! 
பகைக்கு நன்கு தெரிந்த 
உன் பாய்ச்சலை 
உன் நகங்களை 
உன் உறுமலை 
உன் தோல்வியென உலகறிவித்த 
நிலத்தினிலிருந்து நகர்த்து 
அது தான் உன் 
இன மானம் காக்கும் !



Thursday, August 30, 2012

பதுங்கல் பாய்ச்சலாய் உருக் கொள்ளும்


அவர்களின் வாழ்க்கை விசித்திரமானது
கடந்த காலங்களைப் போல்
போர் மட்டுமே இல்லையே தவிர
மரணங்கள் பிறந்தபடிதானுள்ளது. . . .!

புவியில் ஒரு புது கொலைநுட்பம்
போரின்றி ஓரினம்,
அவர்க்கு தெரியாமலே அழிக்கப்படுவது
இதுவே முதல்முறை !

அவர்களுடைய வாழ்வு
பதுங்ககழிக்குள்
நாட்காட்டி கிழித்தது பலகாலம்,

இப்போது ஒரு மாறுதல்!

துயிலுரிந்து பகை தின்னும்
தோழிகளின்
சிதைந்த யோனிகளின் கறைபடிந்து
கிழிகிறது . . . .

அங்கீகாரமில்லாத
ஒரு அகதி வாழ்வோடு
ஆறு தசாப்தங்கள்,
நாம் கேட்ட உரிமையை
அதோ அந்த ஆழி கவ்விக் கொண்டது !

எப்பொழுதும் தீண்டலாம் பெரும் விடம் கொண்டு
எங்கள் யோனிகளை
கயவரின் பெரும் நாக்கு,
இனவெறியின் அதியுச்சம்
பகைக்கு எழும் காமப்பசிக்காய்
இரையாகிப் போகலாம்
அம்மண்ணின் பூர்வீகப் பேத்தியினுடல். . . !

அதிகமாகும் அவலத்தின்
முகம் கண்டு
மரணமாய் உலகுணரும்
பதுங்கல்,
பாய்ச்சலாய் உருக் கொள்ளும்
பகை உயிர்க் கொல்லும்!

நெடிலேறிய மிருக நகங்களால்
கீறிக் கிழிந்தது,
அவரவர் வாழ்வும்,வயதும் !

கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும்
திட்டமிடப்பட்ட சித்ரவதைகளுடனும்
கணக்கில்லாமல்,
உயிர்களைப் பறிக்கிறது !

போதிமரமும் கொலைகளை
மௌனமாய்
சம்மதிக்கிறது!


கடற்கரையில் சுடுகாடு
இல்லையில்லை
கடலே சுடுகாடு!
மரணமே மரணித்துப் போன
மரண விழா,
மே பதினெட்டு!

விட்டுச் சென்ற வலியாகவும்
பகை மீதான வன்மத்தையும்
யாரும் எதிர்பாராத,
ஒரு தேதியில்
செய்தியாக வாசிக்க கூடும்!
ஒரு வல்லரசு
ஒன்றின் உத்தியோக பூர்வ தொலைக்காட்சி
மீண்டும்
தாகத்தின் தேடலில் தாயகத்தின் புதல்வர்களென . . .!

Monday, August 27, 2012

அத்தருணத்தில் பகைவீழ்த்தி





அட மழையில் ஒரு ராத்திரி 

நனைந்த படியும், 
வெந்து போய்க்கிடக்கிறாள் 
என் தேசத் தாய்! 


அன்றைய பகல்பொழுதில் தான் 
நான்கு நாள் 
இடைவெளிக்கு பின்னர் 
சந்திகளில் சாவுகள் ஆரம்பிக்கப்பட்டன! 


நீண்ட பெரும் பகை மூட்டத்தின் 
விலகலின் பின்பு 
கந்தகம் தின்று கொண்டிருந்தது 
அவர்களை . . . 


தேசத்தின் சொந்தக்காரர்களை 
நிர்வாணமாக்கி கொண்டிருக்கிறது காலம், 

ஆடைகளின்றி மேனி காட்டுதல் 
மட்டுமே நிர்வாணமன்று, 
சொந்தமாய் 
நாடில்லாமல் நடமாடித் திரிதலும் 
நிர்வாணமாய் உணரும் தன்மானத்தவர்கள் அவர்கள்! 

பாட்டனின் கதைகள் சொல்லி 
காற்றிலாடிய பனைகள் கழுத்தறுக்கப்பட்டும், 
வயல்களில் கந்தகம் விதைக்கப்பட்டும், 
உயிர்கள் சிதறிய வீதிகள், 
ஊனமாக்கப்பட்ட உடல்கள், 
எரிந்த வீடுகள், 
என இழப்புகள் நீண்டு போனாலும். . . 

சாம்பலாகாத உணர்வுகளுடன் 
ஆயுதப் பேய்களிடம் 
நாள் நாளாய் கரைவது உயிர் மட்டுமே ! 

எங்களுடைய வாழ்க்கை 
ஈசலுக்கு சமனானது, 
அதைவிட 
சாபமானது 
அன்றே பிறந்து அன்றேயிறக்கலாம்! 

எங்கள் வீட்டின் 
கிடுகு வேலிகளுக்கும் மின்சாரம் பாய்ச்சப்படும் 
வேறு பாய்ச்சலுக்கு பயந்து . . . ? 

வாழ்க்கையில் ஒரு அத்தியாயமும் 
வழிமுறையில் ஒரு கட்டமும் 
முடிந்திருக்கிறதே 
தவிர, 
இப்போதும் 
தீராமல் எரிந்து கொண்டுதானிருக்கிறது. . . 
எங்கள் 
வலியினதும் வேட்கையினதும் 
அகல்விளக்கு ! 

விம்மியும் வராத அழுகை 
தணிந்து போகிறது 
அழுகைக்கு பயனில்லையென தெரிந்து ? 

கடுமையான தீக்காற்று 
கானகத்தில் கருக்கொண்டிருக்கிறது 
என் தேச இடர்களை எரிக்க . . .! 

எங்கள் ஆன்மாவின் நிழலாய் 
குடியிருக்கும் தேசம் 
எமக்கென ஆவதற்காய்! 
நான் மடிந்து போகலாம் 
மன மகிழ்வோடு 
அத்தருணத்தில் பகைவீழ்த்தி . . .!

Saturday, August 25, 2012

தெய்வங்களின் இருப்பிடம் கோவில்களில் தான்\'\'





Tuesday, August 21, 2012

மீறலின் தர்மம் காதலுக்கு



Saturday, August 18, 2012

 
மதிப்புக்குரிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் நான். 

எம் உடலெரியும் தாய் நாடு