Pages

Wednesday, June 27, 2012

இழந்த மண்


இனிமேல்
நீ
என்னை சுமக்க முடியாது ?

என்னை
சுமந்த 
உன்னையே
காப்பாற்ற முடியாமல்
கடல் கடந்து
காணாமல் போய்விட்டேன் !

நீ
எனக்கென்று
வைத்திருந்த இடங்களில்
என்னை பார்க்கமுடியாது !

உன்னை மீட்கும்
அந்த
புனித
பிறவியாக
நான் வரவில்லை !

அந்த
நாயகர்களின் கருவிகளும்
இப்போது
என்னிடமில்லை !

கவிதைகளாய் கண்ணீர் விட
எழுதுகோலை மட்டும்
கரம் பிடித்துள்ளேன் !

என்னுடைய மகிழ்ச்சி
இறந்து போய்
ஈமக் கிரிகைகளும்
செய்தாகிவிட்டன !

வீதியெங்கும்
மரணவீட்டின் அடையாளமாய்
தோரணங்கள்
அழுத படி தொங்கின !

ஒரு நாழிகை
நின்று
நிமிர்ந்து பார்க்கிறேன் !

ஒவ்வொரு நிமிடங்களும்
நொறுங்கி போகிறது
ஒரு கண்ணாடியாய்
மரண பயத்தில் !


ஒரு இலையுதிர்காலமாய்
வறண்டு போயிருக்கிறாய்
என்னை சுமந்த
அன்னை மண் நீ !

என்
எழுதுகோல்
கவிதை எழுதுகிறது,
இப்போது இலையுதிர் காலம்
தான்
வசந்த காலத்திற்காய் என !

என் தேசம்













பள்ளிக் கூட வளவுகளிலும் கண்ணி வெடி வயல்கள் 
விதைத்து விட்டிருக்கிறது போர்,
என் தேசமெங்கும் எறிகணைகள் பித்தெறிந்த
அம்மாக்களின் மார்புகளிலிருந்து கசிந்தோடிய 
குருதி காய்ந்து போயிருக்கிறது,
அவர்களின் குழந்தைகளின் முகத்தில்.
நிர்வாண நிலையினிலே இரத்தச் சகதிக்குள்
நீந்தியவ்ர்களின் தசைகள் மறைக்கபடுகின்றன அபிவிருத்தியாய்...

தமிழச்சிகளின் யோனிகளினால் 

அரச மர இலைகளுக்கு பச்சையம் தயாரிக்கப்படுகிறது,
முள்ளிவாய்க்காலுக்கு பின்
எங்களூர் பூவரசம் பூக்கள் மஞ்சளாய் பூப்பதில்லை,
கனகாம்பரம் பூக்கள்வாசம் வீசுவதில்லை.
எருக்களைகள் மட்டுமே தேசமெங்கும் பரவி கிடக்கிறது ...

இரவின் மகிழ்ச்சியில் முத்தம் கொடுத்து நான் உறங்கிய
வீட்டு முற்றத்தில் கந்தகம் பரவிக் கிடக்கிறது ,

பேய்களின் காலடிச் சத்தம் கேட்டு
தும்பி பிடித்து மகிழும் எங்கள் ஊர் சின்னன்கள்
தூக்கத்தில் மிரண்டு எழும்புகின்றனர்!

இரும்புத் தொப்பிகள் எங்களின் வீதிகளில்
உள்ள மரங்களை எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது,
துப்பாக்கிகளை விட அவன் குறிகளால் திட்டமிட்டு
அழிக்க படுகிறது என் வருங்கால சந்ததி!

நாங்கள் சுதந்திரமாய் பறந்து பாடிய தேசத்துள்
முட்கம்பிகள் மீண்டும் வேலிகள் மீது கொடியாகின்றது,

துட்டகை முனுக்களால்
அரச மரத் தேவனுக்கு
எங்கள் ரத்தத்தில் அபிடேகம் செய்யப்படுகிறது!

என் உறவுகளின் அங்கங்களின் போர்ச் சிதைவுகளிலிருந்து
கண்ணை மூடிய படியே வருகிறான் புத்தன்!

துப்பாக்கி ஏந்திய கயவர் கூட்டம்
குவளைகளை ஏந்திய படியே உலா வருகிறது
இரத்தங்களை ஓட விடாமல் சேகரிக்க

என் பள்ளி முட்கம்பிகளானது,
என் வீடு கண்ணீரானது,
என் கோவில் ரத்தங்களானது,
மொத்தத்தில் என் தேசம் சுடுகாடாய்யானது ....

Wednesday, June 13, 2012

விருட்சத்தின் உரம் குருதி


இப்போதும் நறுமணமாயிருக்கிறது
ரத்த ஆறுகள்
தேசக் கனவிற்காய்
சிந்திய குருதி என்பதால்


எமது
குருதி தடங்களையெல்லாம்
அழித்தொழிக்க
திட்டமிட்டார்கள்
தீயவர்கள்


வாசனைப் பூக்கள் மலர மறந்து
ரத்த வாடையில் மலர
மகிழ்ச்சி செத்து
கானல் புன்னகை மட்டும் மிஞ்சியது.
கூடவே
மரணத்தில் மகிழ்ந்து
மலர்ந்து
கொண்டன எங்கள் முகங்கள்!


எமது தாய்மண்
நிறமாறிப்போனது.
விடுப்பு இல்லாமல்
எப்போதும் ஒப்பாரி ஒலித்துக் கொண்டது,
மரணங்கள் பிரசவிக்கும் மண்ணாகியது


என் இனமழித்தல் அங்கு அரசபணியானது
எமைக் கொல்லும் விமானங்கள்
தேசியப் பறவையாய் பிறப்பெடுத்தது


தமிழர்கள் எப்போதும் மரணத்தில்
மகிழ்ந்து கொண்டார்கள்
மண்ணின் கனவோடு
தெருவெங்கும் பிணமாகி,
பயிலுமிடமெலாம்
தசைகள் சிதறி,
மூலஸ்தானமெல்லாம் குருதி அபிசேகம்
தமிழர் குருதியில்
செய்தனர் பகைவர்
குசியாய் இருந்தனர் கடவுள்களும்-தமிழன்
கசியும் ரத்தத்தில்


தமிழினம்
தேசக் கனவின் மகிழ்ச்சியோடு
மரணித்துக் கொள்கிறது ,
சுவாசித்துக் கொள்கிறது


அப்போது வழிந்த
ரத்த ஆறு
வரும் தேசத்தின் வணங்குமிடம்,
அரும்பும் விருட்சத்தின் உரம்!

Sunday, June 10, 2012

மீண்டும் உயிர்த்தெழுவேன்






தோழர்களே !
நானும் சிலுவையில்
அறையப்பட்டவன் தான்
இன்னும்
உயிர்க்கவேயில்லை -என்
குருதிகளும்
தசைகளும்
தரையோடு முத்தமிடுகின்றன!
வலிகளும்
பாவங்களும்
என்னோடு சொந்தமாகின்றன!
சிலுவையில்
நின்ற படியே
கனவு காண்கிறேன்
இனி வரும் நாட்களில்
மீண்டும்
உயிர்த்தெழுவேன்.

கவிராசனுடன் ஒரு கவிக் குழந்தை





கவியுலகின் பேரரசு வைரமுத்து ஐயா அவர்களுடன் ஈழத்துக் கவிஞர் அகரமுதல்வன்































Saturday, June 9, 2012

இறுதி அதுவல்ல!
















நேற்று கடந்து போன இரவு

காற்றுடன் அழுது போனது -கல்லறை
கடவுள்கள் கனவில் வந்து போனார்கள்
கேள்விகள் பல கேட்டு சென்றார்கள் !

குருதி சிந்திய கொள்கையை
மறதி கொண்டீரோ?-மூடரே
ஓய்வு கொண்ட நாட்களை
இறுதி என்று நினைத்தீரோ ?

உறுதி எடுத்துக்கொள் தோழா
இறுதி அதுவல்ல!
பரவி அடி நடக்கும் எம்
குருதி குடித்தவனின் உயிர்
துடிக்க மறக்கும் !